ஜெ. பற்றிய பியூஷின் கருத்து உண்மைதான்.... இது தான் மக்களின் இன்றைய அனுபவம்: பிரகாஷ் ஜவடேகர்
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க இயலவில்லை என்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்த கருத்து உண்மை தான் என்றும், இது தான் மக்களின் தற்போதைய அனுபவம் என்றும் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் தலைநகர் டெல்லியில் நடந்த இந்திய வர்த்தக கூட்டமைப்பின் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல், ‘இந்திய மாநிலங்களில் ஒன்றாக இருந்த போதும், மற்ற மாநில முதல்வர்களை எளிதால் சந்திக்க முடிந்தது. ஆனால் தமிழக முதல்வரை ஒருமுறை கூட சந்திக்க இயலவில்லை' என பரபரப்பு புகாரைத் தெரிவித்தார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக அரசு என்ன விளக்கம் தர இருக்கிறது என எதிர்பார்ப்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பியூஷின் குற்றச்சாட்டு பொய்யானது என அதிமுக தரப்பில் இருந்து அமைச்சர்கள் ஓபிஎஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜெயலலிதா பற்றி பியூஷ் கோயல் தெரிவித்த கருத்து உண்மைதான் என மத்திய அமைச்சரும், பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இது தொடர்பாக அப்போது அவர் கூறுகையில், ‘நாளை (இன்று) மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நான் சென்னை, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு செல்கிறேன். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்பதை சென்னையில் தெரிவிப்பேன்.
சமீபத்தில் தமிழக முதல்வர் பற்றி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்த கருத்து உண்மையானது. இதுதான் மக்களின் இன்றைய அனுபவம்' என்றார்.