இது "டைஃபி" கலாட்டா... பிரகாஷ் காரத் வேண்டாம்.. பிரகாஷ் ராஜ் வரட்டும்!
Recommended Video
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 3 நாள் மாநில மாநாட்டைத் தொடங்கி வைக்க நடிகர் பிரகாஷ் ராஜ் அழைக்கப்பட்டுள்ளார். மூத்த தலைவர் பிரகாஷ் காரத்துக்குப் பதில் பிரகாஷ் ராஜ் அழைக்கப்பட்டுள்ளதால் சலசலப்பு கிளம்பியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பிரகாஷ் காரத். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர். அவருக்குப் பதில் பிரகாஷ் ராஜ் அழைக்கப்பட்டுள்ளதற்கு வாலிபர் சங்கத்தினர் கூறும் காரணம், காரத்தை விட பிரகாஷ் ராஜ் படு கடுமையாக பாஜகவை எதிர்த்துப் பேசி வருகிறார் என்பதே.
ஹூக்ளியில் இந்த மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது செல்வாக்கை இழந்து நிற்கிறது. அங்கு மீண்டும் கோலோச்சுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அது முடுக்கி விட்டுள்ளது. பிரகாஷ் ராஜின் வருகை மாநாடு குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர் அழைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
சமீப காலமாக பிரகாஷ் ராஜ் காவி ராஜ்ஜியத்தை கடுமையாக எதிர்த்தும், விமர்சித்தும் பேசி வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடியின் கொள்கைகளை கடுமையாக விமர்சிக்கிறார். காவிமயமாக்கலை கடுமையாக எதிர்க்கிறார். நாடு முழுவதும் அவர் மீதான பார்வை அதிகரித்துள்ளது. எனவேதான் பிரகாஷ் ராஜை டைஃபி அழைத்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில் நான் எந்த சிந்தனா வட்டத்தையும் சேர்ந்தவன் கிடையாது. எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. இருப்பினும் இதுபோன்று அழைக்கப்பட்டால் நான் போவதற்குத் தயங்கியதும் கிடையாது. சமீபத்தில் கூட கர்நாடக விவசாயிகள் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டேன். விவசாயத்தை மீண்டும் மறு சீரமைப்பு செய்யத் தேவையானவை குறித்து இளைஞர்களிடையே விவாதித்தேன். அதுபோலத்தான் இதுவும். காங்கிரஸ், பாஜகவிலிருந்து அழைப்பு வந்தாலும் போவேன் என்றார்.