காவிரி குறித்து கேள்வி- கன்னட டிவி இண்டர்வியூவில் மைக்கை கழற்றிப் போட்டு வெளியேறிய பிரகாஷ்ராஜ்!
பெங்களூரு: காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பியதால் கன்னட டிவி சேனல் இண்டர்வியூவில் மைக்கை கழற்றிப் போட்டுவிட்டு கடும் கோபத்துடன் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.
நடிகர் பிரகாஷ் ராஜின் கன்னடத் திரைப்படம் இதொல்லே ராமாயணா வரும் 7-ந் தேதி வெளியாகிறது. இது தொடர்பாக கன்னடத் டிவி சேனல் ஒன்றுக்கு பிரகாஷ் ராஜ் பேட்டியளித்தார். அப்போது அவரை பேட்டி கண்டவர், காவிரி விவகாரம் பற்றி நீங்க என்ன சொல்றீங்க? சுமுகமா இதைத் தீர்க்க முடியாதா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியா? கர்நாடகாவுக்குப் பாதிப்பா? தமிழ்நாட்டுக்குப் பாதிப்பா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்.
இதற்கு கோபத்துடன் பிரகாஷ்ராஜ் அளித்த பதில்:
நான் ஒரு திரைப்பட நடிகர். இதொல்லே ராமாயணா' படத்தைப் பற்றிப் பேச வந்திருக்கேன்.
காவிரி பெரிய விஷயம்
இது திரைப்படத்தைப் பற்றிய நிகழ்ச்சி. நடிகனாக அதைப் பற்றிப் பேசுகிறேன். காவிரி விவகாரம் அரசியல்ரீதியாக ரொம்பப் பெரிய விஷயம். நீங்கள் நினைப்பது மாதிரி சின்ன விஷயம் இல்லை. மிகவும் ஆழமான விஷயம்.
விரிவாக பேசனும்
விவசாயிகளின் பிரச்சினை வெறும் நீர் மட்டுமில்லை. வேறு சில பெரிய பிரச்சினைகளும் இருக்கின்றன. அதைப் பற்றி விரிவாகப் பேச வேண்டும்.
வாயை பிடுங்காதீர்...
இது மாதிரியான திரைப்பட நிகழ்ச்சிகளில் சும்மா சும்மா வாய்க்கு வந்த பிரச்சினையைக் கேட்டு என் வாயைப் பிடுங்காதீர்கள். இந்த மாதிரியான பிரச்சினையைப் பற்றிக் கேட்பதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?
கெட்ட புத்தி
மக்கள் ஏற்கெனவே கோபத்தில் இருக்கிறார்கள். வலி இருக்கிறது. சினிமா நடிகனிடம் இதைப் பற்றியெல்லாம் கேட்க வேண்டும் என்ற கெட்ட புத்தி உங்களுக்கு எங்கிருந்து வருகிறது?
அப்படியே போடுங்க...
இது நல்ல சமயம் இல்லை. தயவுசெய்து நீங்கள் பொறுப்புடன் இருங்கள். இதை அப்படியே மக்களுக்கு ஒளிபரப்புங்கள்.
பொறுப்பே இல்லை...
ஏன் உங்களுக்கு இந்தப் பொறுப்பு இல்லை. வாய்க்கு வந்த விஷயங்களை எல்லாம் ஏன் ஒளிபரப்புகிறீர்கள்? எந்தச் சந்தர்ப்பத்தில் எந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லையா?
எல்லாரும் நடிகன் தான்
சினிமா நிகழ்ச்சியில் எதற்காக அதைக் கேட்கிறீர்கள்? இங்கு இருப்பவனும் நடிகன்தான். அங்கிருப்பவனும் நடிகன்தான். எல்லாரும் நடிகர்கள்தான். எல்லாரும் மனிதர்கள்தான். அரசியல் வேறு. இது எல்லாருக்கும் தெரியும்
வெளிநடப்பு
இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறிக் கொண்டே தம்முடைய சட்டையில் பொருத்தப்பட்ட காலர் மைக்கை கழற்றி தூக்கி எறிந்துவிட்டு கோபத்துடன் வெளியேறினார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.