ஓட்டு அரசியலுக்கே முழுக்கு- ஆர்.எஸ்.எஸ்., பாஜக மீது ஶ்ரீராம் சேனா முத்தலிக் கடும் பாய்ச்சல்!
சிக்மகளூர்: தம்முடைய ஶ்ரீராம் சேனா இனி ஓட்டு அரசியலில் ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் பிரமோத் முத்தலிக் அறிவித்துள்ளார். மேலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மற்றும் பாஜக ஆகியவை இந்துத்துவா கொள்கைகளுக்கஅக எதையும் செய்யவில்லை எனவும் முத்தலிக் சாடியுள்ளார்.
சிக்மகளூரில் செய்தியாளர்களிடம் முத்தலிக் கூறியதாவது:
தீவிர அரசியலில் இருந்து எமது அமைப்பு ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளது. தேர்தல் அரசியலில் இனிமேல் ஶ்ரீராம் சேனா ஈடுபடாது.
எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒரு தலைவருமே தேர்தலில் போட்டியிடவும் மாட்டார்கள். இயக்கத்தை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட உள்ளோம். எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது ஏராளமான பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை எதிர்கொள்ளவே நாங்கள் நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறோம். அரசியல் அதிகாரத்தின் மூலம் எமது இயக்கத்தினருக்கு உதவலாம் என நினைத்தேன். அதுவும் நடக்கவில்லை.
அரசியலில் வெற்றி பெற ஜாதிய பலம், பணம் பலம் தேவை. அது எதுவும் எங்களிடம் இல்லை. பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் போன்றவை இந்துத்துவா கொள்கை பேசுவோருக்காக எதையுமே செய்யவில்லை.
சங் பரிவார இயக்கங்களில் பிரவீன் தொகாடியா போன்ற கொள்கையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுவிட்டனர். வெறும் அரசியலுக்காக இந்துத்துவா கொள்கையை அவர்கள் பேசிவருகின்றனர்.
இவ்வாறு பிரமோத் முத்தலிக் கூறினார்,