சாலை விபத்தால் பிரணாப் முகர்ஜி தலையில் ஏற்பட்ட காயம்.. 13 வருடம் முன்பு சிகிச்சையளித்த டாக்டர் தகவல்
கொல்கத்தா: பிரணாப் முகர்ஜி கார் விபத்தில் சிக்கி தலையில் காயமடைந்த தகவலை 2007 ஆம் ஆண்டு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டி காரணமாக, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார் பிரணாப் முகர்ஜி. அவருக்கு அறுவை சிகிச்சை முடிவடைந்த நிலையில், கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. மகன் கோரிக்கை
சிகிச்சை
இந்த நிலையில்தான் 2007ஆம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி, பிரணாப் முகர்ஜி, தலைமையில் காயம் ஏற்பட்ட தகவலை அப்போது சிகிச்சை அளித்த அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணா நகர் என்ற இடத்தில் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் பசுதேப் மண்டல். இவர் மகளிர் சிகிச்சை நிபுணராக உள்ளார்.
2007ம் ஆண்டு
2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற ஒரு சம்பவத்தை அவர் தற்போது ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவரது வார்த்தைகளிலேயே கேளுங்கள்: முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி பிரணாப் கார் சென்று கொண்டிருந்தபோது நாதியா மாவட்டத்தில் ஒரு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. அவர் அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
தயார் நிலலை
தலையில் அப்போது அவருக்கு படுகாயம் ஏற்பட்டு, ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனே அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு பாதுகாவலர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிடி ஸ்கேன். எக்ஸ் ரே போன்ற வசதிகள் எதுவும் கிடையாது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உங்களது மருத்துவமனையில் அனைத்து மருத்துவ வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். பிரணாப் முகர்ஜி உங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நாங்கள் அவசரகதியில் அனைத்தையும் தயார் செய்து வைத்தோம்.
அமைதியாக இருந்தார்
எங்களது மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தனர். கடுமையான வலி இருந்தபோதிலும் கூட அவர் மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் காணப்பட்டார். மிகவும் எளிமையாகவும் நடந்துகொண்டார். நாங்கள் நடத்திய பரிசோதனையின்போது அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய அளவில் தலைக்குள் காயம் ஏற்படவில்லை என்பது தெரிந்தது. இதன்பிறகு இரவோடு அவர் கொல்கத்தாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு குணப்படுத்தப்பட்டது. இவ்வாறு அந்த மருத்துவர் தனது அனுபவத்தை கூறியுள்ளார்.
மூளை ரத்தக் கட்டு
தற்போது பிரணாப் முகர்ஜி டெல்லி ராணுவ மருத்துவமனையில் தலையில் ரத்தக் கட்டுக்காக சிகிச்சைக்கு சென்றுள்ளார். ஒருவேளை 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தின் போது ஏற்பட்ட ரத்தக் கட்டு கவனிக்கப்படாமல் விட்டு இப்போது பெரிதாக இருக்குமோ என்ற ஐயப்பாடுகளை இந்தச் சம்பவம் பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.