மருத்துவ பொதுநுழைவுத் தேர்வுக்கான அவசர சட்டத்துக்கு பிரணாப் ஒப்புதல்- தமிழகத்துக்கு விலக்கு
டெல்லி: மருத்துவ பொதுநுழைவுத் தேர்வுக்கான அவசர சட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார். இதில் தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடப்பாண்டில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழகம், மகாராஷ்டிரம் உட்பட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழகத்தில் நுழைவுத் தேர்வு கிடையாது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த அரசுகள் சார்பில் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இது தொடர்பாக அனைத்து மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லியில் அண்மையில் ஆலோசனை நடத்தினார். அப்போது சிபிஎஸ்இ பாடத்துக்கும் மாநில பாடத்திட்டத்துக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மாநில அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து நடப்பாண்டில் மட்டும் பொது நுழைவுத்தேர்வில் இருந்து மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பான அவசர சட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
இருப்பினும் இந்த அவசர சட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடனே கையெழுத்திடவில்லை. இந்த சட்டம் குறித்து மத்திய அரசிடம் கூடுதல் விளக்கங்களை அவர் கோரியிருந்தார். இதனால் அமைச்சர் நட்டா ஜனாதிபதியை சந்தித்து விளக்கங்களை அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பொதுநுழைவுத் தேர்வுக்கான அவசர சட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார். இந்த அவசர சட்டத்தில் தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நடப்பாண்டில் நுழைவுத் தேர்வு முறையில் இல்லாமல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே கலந்தாய்வு மூலமாக மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும்.