நாக்பூர் ஆர்எஸ்எஸ் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக காங் கட்சியின் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு
நாக்பூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் கட்சியின் ஆண்டு விழா அக்கட்சியின் தலைமையகமான நாக்பூரில் உள்ள ரேஷிம் பாகில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு புகழ்பெற்றவர்களை ஆண்டுதோறும் அழைப்பது வழக்கம்.
அந்த வகையில் ஆர்எஸ்எஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக அரசியலில் பிரணாப் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டால் அது காங்கிரஸ் கட்சியுடன் சில மனஸ்தாபத்தை கொடுக்கும். சுதந்திரம் அடைந்த நாள் முதல் அந்த கட்சியுடன் காங்கிரஸ் சற்று விலகியே நிற்கிறது. அதே சமயம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ ஆர்எஸ்எஸ் குறித்து தனது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்ததில்லை.
இன்னும் சொல்லபோனால் மகாத்மா காந்தியை படுகொலை செய்தது ஆர்எஸ்எஸ்தான் என்று ராகுல் காந்தி கூறியதற்கு அந்த அமைப்பினர் மானநஷ்ட வழக்கை போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.