மருத்துவ கல்லூரி வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலையீடா? பிரசாந்த் பூஷண் கேள்வி
லக்னோ மருத்துவ கல்லூரி வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலையிட்டா என விசாரிக்க கோரியுள்ளார் பிரசாந்த் பூஷண்.
டெல்லி: லக்னோ மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி கொடுத்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலையிட்டாரா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வலியுறுத்தியுள்ளார்.
ஒடிஷா மருத்துவ கல்லூரிக்கு முறைகேடா அனுமதி அளித்த வழக்கில் நீதிபதிகளின் பெயரில் லஞ்சம் பெறப்பட்டது. ஒடிஷாவில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் கைதும் செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய பிரசாந்த் பூஷண், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறினார். இந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நீதிபதி செல்லமேஸ்வரர் உள்ளிட்டோருக்கு மருத்துவ கல்லூரி விவகாரம் தொடர்பான ஆவணங்களை பிரசாந்த் பூஷண் அனுப்பியிருந்தார்.
தற்போது, லக்னோ மருத்துவ கல்லூரி ஊழல் விவகாரத்தில் தீபக் மிஸ்ரா தலையிட்டாரா என்பதை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என பிரசாந்த் பூஷண் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய பிரசாந்த் பூஷண் இதைத் தெரிவித்தார்.