நிதிஷின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது மோடியின் மாஜி "மாஸ்டர்மைன்ட்"
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் வெற்றி பெற பிரதமர் நரேந்திர மோடியின் தேசிய தேர்தல் பிரச்சாரத்திற்கு வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோரும் காரணம் என்று கூறப்படுகிறது.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணி தோற்கடித்துள்ளது. இந்நிலையில் நிதிஷ் குமாரின் வெற்றிக்கு முன்பு பிரதமர் மோடியின் வெற்றிக்கு பின்னால் இருந்த பிரசாந்த் கிஷோர்(37) என்பவரும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் சுகாதார நிபுணர் ஆவார். ஐ.நா.வில் பணிபுரிந்த அவர் கடந்த 2011ம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பினார். அதன் பிறகு அவர் இளம் நிபுணர்களுடன் சேர்ந்து ஒரு குழுவை அமைத்து 2012ம் ஆண்டில் குஜராத் தேர்தல் மற்றும் கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மோடிக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தார்.
சாய் பெர் சர்சா என்ற மோடியின் பிரச்சாரம் மிகவும் பிரபலமானது. அந்த பிரச்சார ஐடியாவே பிரசாந்துடையது. லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு குட்டி பிரேக் எடுத்த அவர் பீகார் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமாருக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தார்.
அவர் வகுத்துக் கொடுத்த வியூகங்கள் தான் நிதிஷின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. அவர் முன்னதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியுடனும் பணிபுரிந்துள்ளார். பிரசாந்த் பீகார் மாநிலத்தில் உள்ள பக்சாரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.