டிவி நடிகை பிரதியுஷா தற்கொலை.. 1000 பக்க குற்றப்பத்திரிக்கை.. காதலன் மீது ஏகப்பட்ட புகார்கள்!
மும்பை: டிவி நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில், 1௦௦௦ பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கையை மும்பை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
மும்பையை சேர்ந்த சீரியல் நடிகை பிரதியுஷா கடந்த ஏப்ரல் 1ம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காதலன் ராகுல் சிங் தான் பிரதியுஷா தற்கொலைக்கு காரணம் என்று பிரதியுஷாவின் தாயார் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் காதலன் ராகுல் சிங் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஆனால் கைது நடவடிக்கைகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ராகுல் சிங் நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றார். எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி குற்ற பத்திரிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.
சுமார் 1000 பக்கங்கள் கொண்ட இந்த குற்ற பத்திரிகையில் காதலன் ராகுல் சிங் மீது தாக்குதல், தற்கொலைக்கு தூண்டுதல், மிரட்டல் விடுத்தல் போன்ற குற்றசாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
இதனால் பிரதியுஷாவின் தற்கொலை வழக்கில் ராகுல் சிங் மீதான பிடி இறுகும் எனத் தெரிகிறது.