எடுத்துச் சென்ற 155 பரிசுப் பொருட்களை ராஷ்ட்ரபதி பவனுக்கு திருப்பி அனுப்பிய பிரதீபா பாட்டில்
பிரதீபா பாட்டில் தான் ஜனாதிபதியாக இருந்தபோது தனக்கு கிடைத்த 155 பரிசுப் பொருட்களை மகராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள தனதுகுடும்பத்திற்கு சொந்தமான வித்யா பாரதி ஷைக்ஷனிக் மன்தாய் பள்ளியில் காட்சிக்கு வைக்க எடுத்துச் சென்றார்.
இந்நிலையில் பிரதீபா பாட்டில் எடுத்துச் சென்ற பரிசுப் பொருட்களின் விவரம் கேட்டு ஆர்வலர் சுபாஷ் அகரவால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்தார்.
அவருக்கு அனுப்பப்பட்டுள்ள பதிலில் கூறப்பட்டிருப்பதாவது,
பிரதீபா பாட்டில் ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு கிடைத்த 155 பரிசுப் பொருட்களும் அமராவதியில் உள்ள வித்யா பாரதி பள்ளியில் காட்சிக்கு வைக்க தற்காலிகமாக கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமர் அளித்த மெழுகுவர்த்தி ஸ்டாண்ட், சீனாவில் இருந்து வந்த கிப்ட் பாக்ஸ் உள்ளிட்டவை கடந்த மே மாதம் 22ம் தேதி ராஷ்ட்ரபதி பவனிடம் அளிக்கப்பட்டுவிட்டது. இந்த பொருட்களை ராஷ்ட்ரபதி பவனின் கலை துறை துணை இயக்குனர் பெற்றுக் கொண்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.