நடிகை பிரதியுஷா என்னை அழைக்கிறார், நான் அவரிடம் செல்கிறேன் என்ற ராகுல் மீது வழக்கு
மும்பை: நடிகை பிரதியுஷா பானர்ஜியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலர் ராகுல் ராஜ் சிங் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பிரதியுஷா பானர்ஜி(24) கடந்த 1ம் தேதி மும்பை கோரிகாவ்ன் பகுதியில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் பிரதியுஷாவின் காதலர் ராகுல் ராஜ் சிங்கிடம் கடந்த சனிக்கிழமை 14 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ராகுல் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார்.
ராகுல்
ஐசியுவில் வைக்கப்பட்டுள்ள ராகுலின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார். பிரதியுஷா என்னை அழைக்கிறார், நான் அவரிடம் செல்ல வேண்டும் என்று அவர் மீண்டும் மீண்டும் கூறுவதாக ராகுலின் தந்தை கூறியுள்ளார்.
வழக்கு
ராகுலுக்கும், பிரதியுஷாவுக்கும் இடையேயான காதல் உறவு சரி இல்லை என்றும் உறவை முறித்துக் கொள்ள அவர் விரும்பியதாகவும் அவருடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக ராகுல் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அடி
ராகுலின் முன்னாள் காதலியான சலோனி சர்மா பிரதியுஷாவை அவ்வப்போது சந்தித்து தாக்கி வந்துள்ளார். இதனால் அவர் பயத்தில் இருந்திருக்கிறார். இது குறித்து பிரதியுஷா ராகுலிடம் கூறியபோது எல்லாம் அவர் தனது போனை சுவிட்ச் ஆப் செய்ததுடன் பிரதியுஷாவை சந்திப்பதை தவிர்த்தார் என நடிகையின் நண்பர் விகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
அறை
ராகுல் பிரதியுஷாவுக்கு துரோகம் செய்து வந்ததாக அவரின் தோழி காம்யா பஞ்சாபி மற்றும் நண்பர் விகாஸ் குப்தா தெரிவித்துள்ளனர். ராகுல் பிரதியுஷாவை பார்ட்டிகள் முதல் பொது இடங்கள் வரை பல இடங்களில் அறைந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்
ராகுல் பிரதியுஷாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அதை தாங்க முடியாமல் தான் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் நடிகையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். ராகுலுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.