நடிகை பிரதியுஷா தற்கொலை: பெற்றோர், நண்பர்கள் 'திடுக்' தகவல்
மும்பை: காதலர் ராகுல் ராஜ் சிங்கின் கொடுமையை தாங்க முடியாமல் தான் நடிகை பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். பிரதியுஷா தற்கொலை செய்து கொள்பவர் அல்ல என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பிரதியுஷா பானர்ஜி கடந்த 1ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் காதலர் ராகுல் ராஜ் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராகுல்
ராகுலை வெளியே விடக் கூடாது. என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க உதவுமாறு நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன். ராகுல் என் மகளை கொடுமைப்படுத்தியே முடித்துவிட்டார். அவரது ஆயுள் முழுவுதும் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்று பிரதியுஷாவின் தாய் சோமா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தண்டனை
ராகுலுக்கு தண்டனை கிடைக்கும் வரை என் மகளின் ஆத்மா சாந்தி அடையாது. பிரதியுஷாவுக்கு ஜோதிடத்தில் ஆர்வம் உண்டு. சிம்மராசிக்காரரான அவருக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டு என்று நான் அவரிடம் கூறினேன். அவர் கடைசியாக என்னுடன் செல்போனில் பேசுகையில் வீட்டின் அழைப்பு மணி சப்தம் கேட்டதும் போனை வைத்துவிட்டார் என பிரதியுஷாவின் தந்தை ஷங்கர் பானர்ஜி கூறியுள்ளார்.
பிரதியுஷா
பிரதியுஷா தற்கொலை செய்ய சில மணிநேரங்களுக்கு முன்பு பால்கனியில் நின்று யாருடனோ செல்போனில் பேசியபடி கதறி அழுததாக அவர் வசித்த அதே குடியிருப்பில் இருக்கும் டிவி நடிகர் அனுஜ் சச்தேவா தெரிவித்துள்ளார். பிரதியுஷா தனக்கு பழக்கம் இல்லாததால் அவரின் வீட்டிற்கு சென்று அவரை பார்க்கவில்லை என்கிறார் அனுஜ்.
தற்கொலை
பிரதியுஷா நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தார். அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார். தன்னை படாதபாடு படுத்திய ராகுலை விட்டுப் பிரிய அவர் முடிவு செய்திருந்த நிலையில் இறந்துள்ளார் என்கிறார்கள் அவரது நண்பர்கள்.