கர்ப்பத்தைக் கலைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட பிரதியுஷா... டாக்டர்கள் தகவல்
மும்பை: சின்னத்திரை நடிகை பிரதியுஷா தற்கொலைக்கு முன்னர் கருக்கலைப்பு செய்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த பிரபல இந்தி சின்னத்திரை நடிகை பிரதியுஷா (24). இவர் நடித்த இந்தி சீரியல் ஒன்று தமிழில் மண்வாசனை என்ற பெயரில் ஒளிபரப்பாவதால், தமிழ் ரசிகர்களுக்கும் இவர் அறிமுகமானவரே.
இந்நிலையில், இம்மாதம் முதல் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் பிரதியுஷா. காதலருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
காதலரிடம் விசாரணை...
இது தொடர்பாக அவரது காதலரான தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் ராகுலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராகுல் மீது பிரதியுஷாவின் தாயார் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
சந்தேகம்...
இதற்கிடையே பிரதியுஷாவின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் தற்கொலை செய்து கொண்டபோது கர்ப்பமாக இருந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்திருந்தனர். தற்போது ஆய்வுகளின் மூலம் அந்த சந்தேகம் உண்மையாகியுள்ளது.
கர்ப்பம் உறுதி...
அதாவது கர்ப்பமாக இருந்த பிரதியுஷா, தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் கருக்கலைப்பு செய்திருக்க வேண்டும் என்பது அவர்களது வாதம். இது பிரதியுஷா கருப்பபையில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்களை பரிசோதனை செய்ததன் மூலம் தெரிய வந்துள்ளதாக ஜேஜே மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விசாரணை...
ஆனால், எவ்வளவு நாட்கள் அவர் கர்ப்பமாக இருந்தார் என்றும், ஏன் கருக்கலைப்பு செய்தார் என்பது குறித்தும் காரணம் தெரியவில்லை. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வழக்கில் திருப்பம்...
பிரதியுஷா கர்ப்பமாக இருந்ததும், பின்னர் அதனை அவர் கருக்கலைப்பு செய்து கொண்டதும் உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.