போலீசில் சரணடைய முடிவு.. என்கவுண்டருக்கு திட்டமிட்டுள்ளதாக கண்ணீர் விட்டு கதறிய பிரவீன் தொகாடியா
Recommended Video
அகமதாபாத்: போலீசில் சரணடைய உள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்தார்.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில இந்திய தலைவர் பிரவீன் தொகாடியா நேற்று திடீரென மாயமானதாக கூறப்பட்டது. குஜராத் போலீசார்தான் அவரை கைது செய்திருப்பதாக விஹெச்பி நிர்வாகிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் அகமதாபாத் மருத்துவமனையில் சுயநினைவில்லாத நிலையில் தொகாடியா அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தபடி பிரவீன் தொகாடியா பேட்டி அளித்தார்.
அப்போது, தனது குரலை அடக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். ராஜஸ்தான் காவல்துறையினர் தன்னை கைது செய்ய முயற்சித்ததை சுட்டிக்காட்டிய அவர், தன்னை என்கவுண்டரில் கொல்லும் சதி இருப்பதாக சிலர் தனக்கு அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் அப்போது செய்தியாளர்கள் மத்தியில் உணர்ச்சி வசப்பட்ட தொகாடியா கண்ணீர் விட்டு அழுதார்.
உடல்நலம் சரியானதும், நான் குஜராத் போலீசில் சரணடைய உள்ளேன். 10 வருடங்கள் முன்பாக எனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு தொடர்பாக சரணடைய திட்டமிட்டுள்ளேன்.
என்னை கொலை செய்ய குஜராத் காவல்துறை திட்டமிட்டிருந்ததால்தான் ஆட்டோவில் ஏறி தப்பினேன். விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரவீன் தொகாடியாவுக்கு பாதுகாவலர்கள் உள்ளனர். அப்படியிருந்தும், அவர் எப்படி தனியாக வெளியே வந்தார் என்பது மர்மமாக உள்ளது.
2002ம் ஆண்டில் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியதாக பிரவீன் தொகாடியா மீது குற்றம் சாட்படப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கைது வாரண்டுடன் போலீஸார் அவரை தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.