பலாத்காரம் செய்த பாவிகளுக்காக பாவமன்னிப்பு கேட்ட கன்னியாஸ்திரி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைக்காக 10 பேர் கைது செய்யப்பட்டு இருந்தாலும், முக்கியமான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் தன்னை கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்த கொடியவர்களின் பாவமன்னிப்புக்காக பாதிக்கப்பட்ட அந்த 71 வயது கன்னியாஸ்திரி பிரார்த்தனை செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தின் கங்க்னாபூர் பகுதியில் கான்வென்ட் பள்ளியுடன் கூடிய ஒரு ஆசிரமம் உள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை சுமார் ஒரு மணியளவில் இந்த ஆசிரமத்துக்குள் புகுந்த 8 பேர் கொண்ட ஒரு கும்பல், உள்ளே தூங்கிக்கொண்டிருந்த 71 வயது கன்னியாஸ்திரியின் கழுத்தை பிடித்து நெரித்து அவரை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்தது. மயங்கிய நிலையில் அவர் கிடந்தபோது பீரோவை உடைத்து உள்ளே இருந்த சுமார் 12 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்த அந்த கும்பல் தலைமறைவானது.
தற்போது ரனகட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த கன்னியாஸ்திரியை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
மனவேதனை
இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட உடல் மற்றும் மனவலியால் அவதிப்படும் அந்த கன்னியாஸ்திரி, தனது நிலையை பொருட்படுத்தாமல் சம்பவம் நடந்த அந்த பள்ளி மற்றும் அங்கு படிக்கும் மாணவ்-மாணவியரின் எதிர்காலம் குறித்து அதிகமாக கவலைப்படுவதாக மருத்துவமனை சூப்பிரண்ட் அடிந்தர்நாத் மொண்டல் தெரிவித்துள்ளார்.
பாவமன்னிப்பு
தனக்கு தீங்கு செய்தவர்களை மன்னித்து விடுமாறு பிரார்த்தனை செய்த அவரது கருணை உள்ளத்தை எண்ணி கண்ணீர் வடிக்கும் உள்ளூர் பெண் ஒருவர், ‘எங்களைப் பொருத்தவரை இந்த கொடூர குற்றத்தை செய்த அனைவரும் கைது செய்யப்பட்டு விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்' என்று கூறினார்.
முக்கிய குற்றவாளிகள்
இதனிடையே கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு 10 பேர் கைது செய்யப்பட்டு இருந்தாலும், இதுவரையில் முக்கியமான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனாலும் பாலியல் பலாத்காரம் தொடர்பாக இதுவரையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர்களின் தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
தனிப்படை அமைப்பு
பாலியல் பலாத்காரத்தில் முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை வெளிமாநிலங்களுக்கும் அனுப்பட்டு உள்ளது. பாலியல் பலாத்காரம் நடைபெற்றது தொடர்பாக போலீஸ் குற்றவாளிகள் அடங்கிய சி.சி.டி.வி. பதிவுகளை வெளியிட்டு இருந்தது. குற்றவாளிகள் நான்கு பேரது புகைப்படங்களும் அதில் இடம்பெற்று இருந்தது. குற்றவாளிகள் தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இதுவரையில் இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை, போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.