கர்ப்பமா என சோதனை.. ம.பி போலீஸ் தேர்வுக்கு வந்த மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்
மத்தியப்பிரதேசத்தில் போலீஸ் தேர்வுக்கு வந்த மாணவிகளை கர்ப்பமாக உள்ளார்களா என சோதனை நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்: மத்தியப்பிரதேசத்தில் போலீஸ் தேர்வுக்கு வந்த மாணவிகளை கர்ப்பமாக உள்ளார்களா என சோதனை நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் போலீஸ் வேலையில் சேர்பவர்களுக்கான தகுதி விபரங்கள் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. பெண்களுக்கான உயரம் எவ்வளவு என அரசு குறிப்பிடவில்லை.
இந்நிலையில் கடந்த புதன் கிழமை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்ற நிகழ்ச்சியில் போலீஸ் கான்ஸ்டபிள்களாக சேர நடந்த தகுதி தேர்வில் பெண்களுக்கான உயரத்தில் தளர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தகுதித் தேர்வில் பங்கேற்ற பெண்கள் போராட்டம் நடத்தினர்.
விடுவிப்பு
அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண்கள் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
மோசமாக நடத்தப்பட்டோம்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சிறையில் போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டோம் என குற்றம் சாட்டினார்கள்.
செல்போன் பறிப்பு
தாங்கள் கிரிமினல்கள் போன்று நடத்தப்பட்டோம் என்றும் போபாலுக்கு மூன்று மணி நேரம் வேனில் பயணித்ததாகவும் தெரிவித்தனர். மேலும் தங்களின் செல்போன்களை பறித்துக்கொண்டு பெற்றோரிடம் பேச அனுமதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
கர்ப்ப சோதனை
சிறைக்கு இரவு அழைத்து செல்லப்பட்டதாகவும் சிறைக்கு சென்றதும், தனியறையில் வைத்து சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோம் என்றும் அது கர்ப்பமாக இருக்கிறோமா? என பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.
ஆண்களும் நுழைந்தனர்
மேலும் தாங்கள் அடைத்து வைக்கப்பட்ட அறைக்குள் ஆண்களும் நுழைந்தார்கள் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டினர். போலீஸ் தகுதி தேர்வில் பங்கேற்ற மாணவிகளுக்கு கர்ப்பமாக உள்ளனரா என சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.