தலித் இளைஞரை மணந்ததால் கொடூரம் - கர்ப்பிணிப் பெண் உயிரோடு எரிப்பு- கர்நாடகாவில் பயங்கரம்!
தலித் இளைஞரை திருமணம் செய்து கொண்டதால் கர்ப்பிணிப் பெண் உயிரோடு எரித்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
பெங்களூர்: கர்நாடகாவில் தலித் இளைஞரைத் திருமணைம் செய்ததால் 21 வயது கர்ப்பிணிப் பெண்ணை அவரது குடும்பத்தாரே எரித்து கொன்றுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பிஜபூர் மாவட்டத்தில் உள்ள குண்டகனாலா கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம் பெண் பானு பேகம். இவருக்கும் 24 வயது இளைஞர் சரணப்பா கொன்னூருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இருவரும் கடந்த ஜனவரி மாதம் கோவாவில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து இருவரும் வெளிமாநிலத்திலேயே தங்கியிருந்த
நிலையில் குடும்பத்தாரின் கோபம் தீர்ந்திருக்கும் என்று எண்ணி கடந்த சனிக்கிழமை சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
எனினும் பானுபேகத்தை அவரது குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கும் குடும்பத்தினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. பானுவின் பெற்றோர்கள் சரணப்பாவை விட்டு விட்டு வருமாறு விரும்பினர். சரணப்பாவின் தந்தையும் இந்த ஜோடியை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் பானுபேகத்தின் குடும்பத்தார் கடுமையாக தாக்கியதால் இது குறித்து புகார் அளிக்க சரணப்பா காவல் நிலையம் சென்றுள்ளார். இந்த நேரத்தில் பானுபேகத்தை அவரது குடும்பத்தார் எரித்து கொன்றுள்ளனர்.
சரணப்பா திரும்பி வந்தபோது எரிந்த நிலையில் பானு கிடந்துள்ளார். மேலும் அவரது உடல் பல முறை கத்தியால் குத்தப்பட்டும் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததால் பெற்றோரே மகளை எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பானுபேகம் எரித்து கொல்லப்படும் போது கர்ப்பவதியாக இருந்துள்ளார். ஈவு இரக்கமற்ற முறையில் பெண்ணை எரித்துக் கொன்ற பானுவின் தாய், சகோதரன், தங்கை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.