9 மாதம் பிரசவ விடுப்பு கேட்ட பெண் டாக்டர்.. வேலை காலி!
ஷில்லாங்: மேகாலயாவில் ஒன்பது மாத பிரசவ விடுப்பு கேட்டதால், தனது வேலையை இழந்துள்ளார் பெண் டாக்டர் ஒருவர்.
மேகாலய மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் இயங்கி வரும் ஹோர்டன் ராபர்ட்ஸ் மருத்துவமனையில் பல் டாக்டராக பணி புரிந்து வந்தவர் ரசெல் ரா ரப்சங்க். கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கு அவர் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் பிரசவ விடுப்பு வேண்டி அவர் விண்ணப்பித்துள்ளார். ஆனால், விடுப்பிற்கு அனுமதி அளித்து கடிதம் வருவதற்கு பதிலாக அவர் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தர சொல்லி அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் கடிதம் அனுப்பியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரசெல், இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்துள்ளார். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கத்தில், ‘நீங்கள் இங்கு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியில் உள்ளீர்கள். உங்களது ஒப்பந்தம் ஜூன் 1ம் தேதியுடன் முடிந்து விட்டது. எனவே, உங்களுக்கு பிரசவ விடுப்பு அளிக்க இயலாது. நீங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து வாங்கிய அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு, வேலையில் இருந்து விலகிக் கொள்ளலாம்' என கூறப்பட்டது.
இதனால், கர்ப்பிணியான ரசெல் தனது வேலையை இழந்தார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் கூறுகையில், 'கடந்த ஐந்து ஆண்டுகளாக ரசெல் இங்கு பணி புரிந்து வந்தார். அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தோடு தான் அவரது ஒப்பந்தம் நிறைவடைகிறது' எனத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ‘நாங்கள் தனியார் மருத்துவமனை நடத்தவில்லை. ஒன்பது மாத கால விடுப்பு என்பது அதிகப்படியான விடுமுறை. வேண்டுமானால் மீண்டும் ரசெல் இங்கு பணிக்கு விண்ணப்பிக்கலாம்' எனத் தெரிவித்துள்ளது.
மேகாலய மகளிர் ஆணைய முன்னாள் உறுப்பினர் யாங்கி இது தொடர்பாக கூறும் போது, ‘பெண்களுக்கு என்று சில அடிப்படை உரிமைகள் உள்ளன. அவற்றை யாரால் மறுக்க முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்குத் தொடுக்கவும் ரசெலுக்கு உரிமை உள்ளது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.