நடிகை ப்ரீத்தி ஜிந்தா பொய் புகார் கொடுத்துள்ளார்: மும்பை போலீஸுக்கு நெஸ் வாடியா கடிதம்
கடந்த மே மாதம் 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது தனது முன்னாள் காதலரும், தொழில் அதிபருமான நெஸ் வாடியா தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, மிரட்டி, கண்ட இடத்தில் தொட்டதாக ப்ரீத்தி மும்பை போலீசில் புகார் கொடுத்ததுடன் வாக்குமூலமும் அளித்தார். மேலும் கடந்த திங்கட்கிழமை அவர் மும்பை நகர போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் நெஸ் வாடியா மும்பை போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
ப்ரீத்தி ஜிந்தா என் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார். நான் அவரை மிரட்டவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த நான் கூறும் 9 சாட்சியங்களை விசாரித்து பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
3 சாட்சியங்கள் ப்ரீத்தி ஜிந்தா கூறியதை போலவே நெஸ் வாடியா அவரை தாக்கி, மிரட்டியதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பஞ்சாப் அணி அதிகாரி ஒருவர் மட்டும் நடந்ததை தான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். சீட் விஷயமாக அவர்கள் விவாதித்தனர். ஆனால் நெஸ் ப்ரீத்தியிடம் தவறாக நடந்ததை தான் பார்க்கவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்டேடியத்தில் ப்ரீத்தியின் அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய 48 மணிநேரத்தில் நெஸ்ஸிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் நெஸ் போலீசாருக்கு சாட்சியங்கள் 9 பேரின் பெயர்களை எழுதி அவர்களிடம் விசாரிக்குமாறு கடிதம் அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.