காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்ப நேரு தயங்கவில்லை- மூத்த பத்திரிகையாளர் விளக்கம்
டெல்லி: 1948-ல் காஷ்மீருக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப முன்னாள் பிரதமர் நேரு தயங்கினார் என்ற பாஜக மூத்த தலைவர் அத்வானியின் குற்றச்சாட்டை மூத்த பத்திரிகையாளர் பிரேம் சங்கர் ஜா மறுத்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சாம் மானக்ஷா, மூத்த பத்திரிகையாளர் பிரேம் சங்கர் ஜாவுக்கு கடந்த 1993ஆம் ஆண்டு அளித்த பேட்டியை மேற்கோள் காட்டி அத்வானி தனது ப்ளாக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில், 1948இல் காஷ்மீரை பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பழங்குடியினர் நெருங்க முற்பட்டனர். அப்போது அங்கு இந்திய ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்ப நேரு தயங்கினார். எனினும், சர்தார் வல்லபபாய் படேல்தான் ராணுவத்தை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தார் என்று அத்வானி குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் சாம் மானக்ஷா தமக்கு அளித்த அந்த பேட்டியில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரேம் சங்கர் ஜா நேற்று விளக்கமளித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அத்வானி தமது ப்ளாக்கில் மானக்ஷா எனக்கு அளித்த பேட்டியை சிறிதும் மாற்றாமல் அப்படியே வெளியிட்டுள்ளார். காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பும் விவகாரத்தில் நேருவுக்கும் பயடேலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்தது என்று முடிவாக அவர் கருத்து கூறியுள்ளதும் உண்மைதான்.
ஆனால், அதுவே முழு உண்மையாகி விடாது. ஏனெனில், காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பலாமா? வேண்டாமா? என்பதில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. எப்போது, எந்தச் சூழ்நிலையில் அனுப்பப்பட வேண்டும் என்பதிலேயே அவர்கள் முரண்பட்ட கருத்தைக் கொண்டிருந்தனர் என்று அந்த அறிக்கையில் பிரேம் சங்கர் ஜா கூறியுள்ளார்.