மகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு- முழு வீச்சில் ஏற்பாடுகள்!
மும்பை/சண்டிகர்: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா ஆட்சியில் உள்ளது. தற்போதைய தேர்தலை பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து எதிர்கொண்டுள்ளன. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 124-ல் சிவசேனா; 164 தொகுதிகளில் பாஜக- கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.,
எதிர்க்கட்சிகளான காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொண்டுள்ளன. காங்கிரஸ் கட்சி 147 வேட்பாளர்களையும் தேசியவாத காங்கிரஸ் 121 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன. மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா, பகுஜன் சமாஜ், சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன. மொத்தம் 3237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அடுத்த ஒன்றரை மாதத்தில் ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு- ஈபிஎஸ் பதவி விலகுவார்: மு.க.ஸ்டாலின்
பாஜக- காங்.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையேதான் பிரதான போட்டியாகும். இந்திய தேசிய லோக் தள், ஆம் ஆத்மி மற்றும் ஸ்வராஜ் இந்தியா கட்சி, ஜேஜேபி, பிஎஸ்பி, எல்ஜேபி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. மொத்தம் 1169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பாதுகாப்பு பணி தீவிரம்
இரு மாநிலங்களிலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் லட்சக்கணக்கான பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹரியானாவில் மட்டும் 75,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக பகீரத பிரயத்தனம்
மகாராஷ்டிரா, ஹரியானா இரண்டிலுமே பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. இம்முறை மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டிருக்கிறது. இரு மாநிலங்களிலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர பிரசராம் மேற்கொண்டனர்.
காங்கிரஸ் மந்தம்
ஆனால் காங்கிரஸ் தரப்பில் தொடக்கம் முதலே மந்தநிலை இருந்து வந்தது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பெரிய அளவில் பிரசராத்தில் ஆர்வம் காட்டவில்லை. அத்துடன் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு வலிமையான கூட்டணி உருவாக்கவும் காங்கிரஸ் தவறிவிட்டது.
ஆட்சியை தக்க வைக்கும் பாஜக
இரு மாநிலங்களிலும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாகவே வந்துள்ளன. அதுவும் ஹரியானாவில் வரலாறு காணாத வெற்றியை பாஜக அறுவடை செய்ய இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.