சீனா அத்துமீறினால்.. ஆக்ரோஷமான பதிலடி கொடுக்க தயார்.. விமானப்படை தளபதி பதாரியா திட்டவட்டம்
ஜோத்தப்பூர்: எல்லைப் பகுதிகளில் சீனா அத்துமீறினால் அதற்கு ஆக்ரோஷமான முறையில் பதிலடி கொடுக்க எப்போதும் தயாராக உள்ளதாக இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அதிலும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கல்வான் மோதலுக்குப பிறகு நிலைமை பல மடங்கு மோசமாகியுள்ளது.
இரு நாடுகளும் எல்லையில் தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருகின்றனர். இதனால் எல்லையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராணுவத்தைப் பின்வாங்குவது குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளிலும் இதுவரை எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
எல்லையில் கட்டுமானம்
இந்நிலையில், அருணச்சால பிரதேச எல்லையில் சுமார் 100 வீடுகளைக் கொண்ட ஒரு கிராமத்தையே சீனா கட்டியது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது. அருணச்சால பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிய சீனா, அதில் கட்டுமானம் மேற்கொள்வதில் தவறில்லை என்றது. இது குறித்துப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், கடந்த சில மாதங்களாகவே எல்லைப்பகுதிகளில் இந்தியாவும் கட்டுமானங்களை அதிகப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.
ஆக்ரோஷமான பதிலடி
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்தப்பூரில் விமானப்படை தளபதி பதாரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் எல்லைப்பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து விமானப்படை கவனித்து வருகிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதலிளத்த அவர், "எல்லையில் சீனா அத்துமீறினால், அதற்கு ஆக்ரோஷமான முறையில் பதிலடி கொடுக்கப்படும். இந்திய விமானப்படை இதற்கு எப்போதும் தாயாராகவே உள்ளது" என்றார்.
சீன எல்லையில் விமானப்படை பயிற்சி
இந்தியா மற்றும் பிரான்ஸ் விமானப்படை இணைந்து ராஜஸ்தானில் டெஸர்ட் நைட் 21 என்ற பெயரில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுகின்றன. அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பதாரியா இதனைத் தெரிவித்தார். மேலும், தற்போது இதேபோல கிழக்கு எல்லையிலும்(சீன எல்லை) பயிற்சி மேற்கொள்ளப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இந்தக் கூட்டுப் பயிற்சி எந்த நாட்டு எதிரானது இல்லை. திறனை வளர்ப்பதும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதும் மட்டுமே இதன் நோக்கம். அதேநேரம் அங்கும் கடுமையான பல பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
கூடுதலாகப் போர் விமானங்கள்
தொடர்ந்து ரபேல் விமானங்கள் குறித்துப் பேசிய அவர், "தற்போது நம்மிடம் 8 ரபேல் போர் விமானங்கள் உள்ளன. அடுத்த மாதம் மேலும் மூன்று விமானங்கள் வரவுள்ளன. இந்த விமானங்களில் தற்போது விமானிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். அடுத்தாண்டு இந்த ரபேல் விமானங்கள் விமானப்படையில் சேர்த்துக்கொள்ளப்படும். நமது விமானப்படையைப் பலப்படுத்தக் கூடுதலாக 114 போர் விமானங்களை விரைவில் வாங்கவுள்ளோம். அதிலும் ரபேல் விமானங்களை வாங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்று கூறினார்.