செக்ஸ் புகாரில் சிக்கிய மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் ராஜினாமா கடிதம் ஏற்பு!
செக்ஸ் புகாரில் சிக்கியதால் மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் தமது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.
டெல்லி: பாலியல் புகாரில் சிக்கியதால் மேகாலயா ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து சண்முகநாதன் அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.
மேகாலயா ஆளுநராக இருந்தவர் சண்முகநாதன். தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்தான் சண்முகநாதன்.
அவருக்கு சிறிது காலம் மணிப்பூர் ஆளுநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. பின்னர் அருணாசலப் பிரதேச மாநில கூடுதல் ஆளுநராகவும் சண்முகநாதன் நியமிக்கப்பட்டார்.
பாலியல் புகார்
இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கினார் சண்முகநாதன். நேர்முக தேர்வுக்கு வந்த இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சர்ச்சை வெடித்தது.
இளம்பெண்கள் கிளப்
இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட ராஜ்பவன் ஊழியர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்களுக்கு சண்முகநாதன் மீது அடுக்கடுக்கான புகார்களை அனுப்பி வைத்தனர். ராஜ்பவனையே இளம்பெண்கள் கிளப்பாகவே சண்முகநாதன் மாற்றிவிட்டார் எனவும் அதில் குற்றம்சாட்டப்பட்டது.
ராஜினாமா ஏற்பு
இதனால் சண்முகநாதன் தம்முடைய பதவியை ராஜினாமா செய்ததாக நேற்று இரவு தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சண்முகநாதனின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பொறுப்பு
இதையடுத்து அஸ்ஸாம் ஆளுநருக்கு மேகாலயா ஆளுநர் பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகாலாந்து ஆளுநருக்கு, அருணாசலம் ஆளுநர் பொறுப்பு கூடுதலாகவும் அளிக்கப்பட்டுள்ளது.