மோடியின் பேரணிக்காக பீகார் பயண தேதியை மாற்றிய பிரணாப் முகர்ஜி
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் 26ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். மேலும் வரும் 27ம் தேதி அவர் பாட்னாவில் அமைக்கப்பட்டுள்ள ஜக்ஜீவன் ராமின் சிலையை திறந்து வைக்கிறார். இந்நிலையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வரும் 27ம் தேதி பாட்னாவில் நடக்கும் பேரணியில் கலந்து கொண்டு அங்குள்ள காந்தி மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் பேசவிருக்கிறார்.
மோடி பீகாருக்கு வரும் நேரத்தில் குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து தடைகள் ஏற்படுத்த நிதிஷ் குமார் அரசு முயற்சி செய்வதாக பாஜக குற்றம்சாட்டியது.
இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் மற்றும் துணை தலைவர் ராஜிவ் பிரதாப் ரூடி ஆகியோர் பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்து அவரின் பீகார் பயண தேதியில் மாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து பிரணாப் தனது பயண தேதியில் மாற்றம் செய்துள்ளார். அவர் மோடியின் பேரணி நடக்கும் முந்தைய நாள் அதாவது வரும் 26ம் தேதி அன்றே பீகாரில் இருந்து டெல்லி திரும்புகிறார்.