புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்!
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
டெல்லி: புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல் தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக் லவாசா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த அச்சல் குமார் ஜோதியின் பதவிக்காலம் முடிவடைந்து இருக்கிறது. இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையருக்கான தேர்வு நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையராக இருந்த ஓம் பிரகாஷ் ராவத் தற்போது தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ஓம் பிரகாஷ் ராவத் இந்தியாவின் 22வது தலைமை தேர்தல் ஆணையராக செயல்படுவார்.
இந்த மாதம் 23ம் தேதியில் இருந்து இவர் தனது பணியை தொடங்குவார். அதேபோல் இவர் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு இருப்பதால் ஒரு தேர்தல் ஆணையர் இடம் காலியாகிறது.
தற்போது அந்த தேர்தல் ஆணையர் பொறுப்பிற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக் லவாசா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இவரும் 23ம் தேதியில் இருந்து இவர் தனது பணியை தொடங்குவார்.
இருவரின் நியமனம் குறித்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் வெளியிட்டார். இன்னொரு தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அதே பதவியில் தொடர்வார் என்று கூறப்பட்டு இருக்கிறது.