சிறார் குற்றவாளிகளின் வயதை 16 ஆக குறைக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
டெல்லி: சிறார் குற்றவாளிகளின் வயதை 16 ஆக குறைக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் சிறார் குற்றவாளி ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இளம் குற்றவாளியின் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில், சிறார் நீதிச் சட்டத்திருத்த (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து அவசரமாக சிறார் நீதிச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்களின் ஆதரவோடு மசோத நிறைவேற்றபபட்டது.
இந்நிலையில், அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டம், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறுவர்கள் பாலியல் பலாத்காரம், கொலை போன்ற கொடிய குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களை வயது வந்தவர்களாக கருதி, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரித்து தண்டனை அளிக்க வகை செய்கிறது.