தமிழக சிறை வார்டன்கள் 5 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது!
டெல்லி: இன்று நாட்டின் 66ஆவது குடியரசுத்தினத்தினை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்பட உள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி சிறந்த சேவை ஆற்றியதற்காக நாடு முழுவதும் உள்ள சிறைத்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி சென்னை புழல் பெண்கள் சிறப்பு ஜெயிலில் முதன்மை வார்டனாக உள்ள விஜயா, திருச்சி மத்திய சிறை முதன்மை ஜெயிலர் ஈஸ்வரமூர்த்தி, பூந்தமல்லி துணை சிறை ஜெயிலர் வாசுதேவன் ஆகியோர் மத்திய அரசின் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சேலம் மத்திய சிறையின் தலைமை வார்டர் துரைசாமி மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை சிறையில் கிரேடு 1 அதிகாரியாக இருக்கும் சோமசுந்தரம் ஆகியோரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.