மாளவியாவுக்கு பாரத ரத்னா- அத்வானி, பாதலுக்கு பத்ம விபூஷண் விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி பிரணாப்!
டெல்லி: இந்துத்துவா அமைப்புகளின் முன்னோடியான மதன் மோகன் மாளவியாவுக்கான பாரத ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவரது குடும்பத்தினரிடம் இன்று வழங்கினார். பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்ட 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்தது. எல்.கே. அத்வானி, பிரகாஷ்சிங் பாதல், ஜகத்குரு ஸ்வாமி ராமபத்ராச்சார்யா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகையில் இன்று இந்த பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் அத்வானி, பிரகாஷ் சிங் பாதல், ஜகத்குரு ஸ்வாமி ராமபத்ராச்சார்யா ஆகியோருக்கு ஜனாதிபதி பத்ம விபூஷண் விருதுகளை வழங்கினார்.
தமிழக முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, பில்கேட்ஸ், சுதா ரகுநாதன் உள்ளிட்ட 12 பேருக்கு பத்ம பூஷண் விருதும், சஞ்சய் லீலா பன்சாலி உட்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருதையும் அவர் வழங்கினார்.
பாரத ரத்னா
சுதந்திர போராட்ட வீரரும் இந்துத்துவா அமைப்புகளின் முன்னோடியான மதன்மோகன் மாளவியாவுக்கான பாரத ரத்னா விருதை அவரது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இன்றைய நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் பத்ம விபூஷண் விருதைப் பெறவில்லை. இன்று பத்ம விருது பெறாதவர்களுக்கு மற்றொரு நாளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.