வருமான வரி சட்டதிருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்
வருமான வரி சட்டதிருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
டெல்லி: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி சட்டதிருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிக்கும் வகையில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8-ந் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள டிசம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வங்கி கணக்குகளில் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் பணம் செலுத்தப்பட்டு இருந்தால், அந்த பணம் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணமாக கருதப்பட்டு, அதற்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான, 'வருமான வரிகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2016' என்ற மசோதா கடந்த மாத இறுதியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சி செய்வோரை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்தால் அவர்களுக்கு அபராதம் உட்பட 85 சதவீதம் வரி விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. அதேநேரம், கருப்புப் பணம் வைத்திருப்போர் வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு தாமாக முன்வந்து ஒத்துக்கொண்டால் அவர்களுக்கு அபராதம் உட்பட 50 சதவீத வரி விதிக்கப்படும்.