இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள்: போட்டோவுடன் டிவிட்டரில் தமிழில் வாழ்த்து சொன்ன குடியரசுத் தலைவர்!
இசைஞானி இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
டெல்லி: இசைஞானி இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா இன்று தனது 75வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.
தமிழில் அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா. சிறந்த இசையமைப்பாளருக்கான மத்திய மாநில அரசுகளின் விருதுகளை பலமுறை குவித்துள்ளார்.
பத்மவிபூஷ்ன் விருது
இந்த இசை மாமேதைக்கு பத்ம விருதுகளையும் வழங்கி அழகு பார்த்தது மத்திய அரசு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை வழங்கி இளையராஜாவை கவுரவித்தார்.
குடியரசுத் தலைவர் வாழ்த்து
இந்நிலையில் இன்று 75வது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இளையராஜாவுக்கு முழுக்க முழுக்க தமிழில் டிவிட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார் குடியரசுத தலைவர்.
|
ராம்நத் கோவிந்த் புகழாரம்
இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர் ,இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் . இவ்வாண்டுத் தொடக்கத்தில்,அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறேன். இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
இளையராஜாவின் போட்டோ
இதேபோல் ஆங்கிலத்திலும் தனது டிவிட்டர் பக்கத்தில் இசைஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்தை கூறியுள்ளார் குடியரசுத் தலைவர். மேலும் இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கியபோது எடுத்த போட்டோவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.