அடுத்தடுத்து பாஜக தலைவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் குடியரசு தலைவர் கோவிந்த்
வெறுப்பு சார்ந்த பாஜக தலைவர்கள் செயல்பாடுகளுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்
Recommended Video
திருவனந்தபுரம்: பாஜக தலைவர்கள் சிலரின் வெறுப்பரசியலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அடுத்தடுத்து அடி கொடுத்து வருகிறார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் சமீபத்திய அடுத்தடுத்த கருத்துக்கள், பேச்சுகள், பாஜக தலைவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் பின்புலத்திலிருந்து பாஜகவில் செயல்பட்டவரான ராம்நாத் கோவிந்த், குடியரசு தலைவர் என்ற முறையில், வெறுப்பரசியலை உடனுக்குடன் கண்டிப்பவராக மாறியுள்ளார்.
இந்த வகையில் முந்தைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை காட்டிலும், ராம்நாத் கோவிந்த்தின் கருத்துக்களை பாஜகவினர் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஹிந்தி திணிப்பு
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதலில் தனது அதிரடி கருத்தாகக அறியப்பட்டது ஹிந்தி திணிப்பு குறித்த பேச்சுக்காகத்தான். தென் மாநிலங்களில் மத்திய அரசு ஹிந்தியை திணிப்பதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். ஹிந்தி எதிர்ப்பு போரை மீண்டும் திமுக முன்னெடுக்க தயங்காது என அவர் எச்சரித்தார்.
திணிக்க கூடாது
இதேபோல பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தி வார்த்தைகளை கன்னட அமைப்பினர் தார் பூசி அழித்தனர். முதல்வர் சித்தராமையாவும், ஹிந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தார். அப்போதுதான், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு முக்கிய கருத்தை சொன்னார். ஹிந்தி பேசும் மாநிலங்கள், அம்மொழி பேசாத மாநிலங்கள் மீது ஹிந்தியை திணிக்க கூடாது என்றார் அவர்.
எதிர்ப்பை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி
பாஜக பலமிக்கதாக இருப்பது ஹிந்தி பேசும் மாநிலங்களில்தான். ஆனால், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தைரியமாக இக்கருத்தை முன்வைத்தார். நாட்டு ஒற்றுமைக்கு ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தினார். தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பை அவர் சுட்டிக்காட்டினார்.
திப்பு சுல்தானுக்கு பாராட்டு
இதேபோல சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை பவளவிழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்றார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். விழாவில் பேசிய அவர், மைசூர் புலி என அழைக்கப்படும் திப்பு சுல்தானை புகழ்ந்து தள்ளினார். திப்புசுல்தானுக்கு எதிரான பிரசாரத்தை கர்நாடக பாஜக வெகு காலமாக முன்னெடுத்து வருகிறது. பிராமணர்கள் பலரை மொத்தமாக தூக்கிலிட்டு கொன்றார், இந்துக்களை கொடுமைப்படுத்தினார் என்று பாஜகவினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதை இஸ்லாமியர்கள் மறுத்து வருகின்றனர். சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ள நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், திப்பு சுல்தானை புகழ்ந்து பேசியதால், அதிர்ச்சியிலுள்ளனர் கர்நாடக பாஜக தலைவர்கள்.
கேரளாவில் சுற்றுப் பயணம்
இந்த நிலையில், குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக கேரளாவில் பயணம் மேற்கொண்ட ராம்நாத் கோவிந்த் திருவனதபுரத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளில் பேசிய ராம்நாத் கல்வி, சுகாதார துறைகளில் நாட்டின் இதர மாநிலங்களுக்கு கேரளா முன்னுதாரணமாக திகழ்வதாக கூறினார்.
பாஜகவினருக்கு தர்ம சங்கடம்
கேரளா என்பது உலகின் முகமாக காட்சியளிக்கிறது என்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டினார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கேரள மருத்துவமனைகள் குறித்து விமர்சனம் செய்திருந்தார். ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கேரளாவில் கொல்லப்படுவதாக பாஜக தலைவர் அமித்ஷா முன்னின்று கேரளாவில் பிரசார யாத்திரை மேற்கொண்டார். ஆனால் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு பாஜக தலைவர்களுக்கு மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வெறுப்பு சார்ந்த பாஜக தலைவர்கள் செயல்பாடுகளுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். அதிலும் தென் மாநிலங்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.