ஜனாதிபதியின் மகளுக்கு பேஸ்புக்கில் 'ஆபாச மெசேஜ்' அனுப்பிய மர்மநபர் !
டெல்லி: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளுக்கு பேஸ்புக்கில் ஆபாச தகவல் அனுப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான சர்மிஸ்தா முகர்ஜிக்கு மர்ம நபர் ஒருவர் பேஸ்புக்கில் ஆபாச தகவல்களை அனுப்பி உள்ளார். அந்த தகவல் பெங்காலி மொழியில் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த சர்மிஸ்தா முகர்ஜி, ஆபாச தகவல்களை அனுப்பிய அந்த மர்ம நபரை முதலில் பிளாக் செய்தார். பின் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அத்துடன், ஆபாச தகவல்களை அனுப்பிய மர்ம நபரின் பேஸ்புக்கை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். மேலும் இதனை பலரும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். குற்றவாளியை பிடிக்க உதவுமாறு சமூக வலைதளவாசிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குடியரசு தலைவரின் மகளுக்கே ஒருவர் ஆபாச தகவல் அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆபாச தகவல் அனுப்பிய நபர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.