ஆசிரியர் அவதாரமெடுக்கும் பிரணாப் முகர்ஜி... டெல்லி மாணவர்களுக்கு ஒரு நாள் பாடம் எடுக்க சம்மதம்
டெல்லி : ஒரு சாதாரண மனிதன் ஒரு நாள் முதல்வர் ஆக மாறுவதை திரைப்படத்தில் தான் பார்த்திருக்கிறோம். ஆனால், உண்மையாகவே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒரு நாள் மட்டும் ஆசிரியராக பணியாற்ற முடிவு செய்துள்ளார்.
இந்த யோசனையை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் அவரிடம் தெரிவித்திருந்தனர். இதில் விருப்பம் கொண்டதால், பிரணாப் முகர்ஜியும் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
இதன்படி ஆசிரியர் தினத்திற்கு முதல் நாளான வரும் செப்டம்பர் 4-ம் தேதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் சர்வோதயா வித்யாலயா பள்ளியின் 11 மற்றும் 12-வது வகுப்பை சேர்ந்த 100 மாணவர்களுக்கு பாடம் எடுக்க உள்ளார். மேலும் சுமார் 100 ஆசிரியர்கள் மத்தியிலும் பிரணாப் உரையாற்ற உள்ளார்.
முதல் முறையாக பிரணாப் முகர்ஜி மாணவர்களுக்கு பாடம் எடுக்க உள்ளார். குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர். அப்துல் கலாம், மாணவர்களை சந்தித்து உரையாடுவதை தன்னுடைய முக்கிய கடமையாகவே வைத்திருந்தார்.
அந்த வரிசையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் ஒரே ஒரு நாள் ஆசிரியர் அவதாரமெடுக்க உள்ளார்.