உத்ரகாண்ட்டில் மோசமான வானிலை... கேதர்நாத் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்த பிரணாப்
உத்ரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் சிவன் கோயிலுக்கு சென்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மோசமான வானிலை காரணமாக பயணத்தை பாதியிலேயே ரத்து செய்தார்.
உத்தராகண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற கேதர்நாத் சிவன் கோயில், இமயமலையின் கார்வால் தொடரில் 3,851 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வழிபடுவதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் நேற்று ஹெலிகாப்டரில் சென்றிருந்தார். ஆனால், அப்போது அங்கு நிலவிய மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக அவரது ஹெலிகாப்டர் தரையிரங்க முடியவில்லை.
கோயில் செல்வதற்காக காவுச்சர் என்னும் மலைப் பகுதியில் ஹெலிக்காப்டரை தரையிரக்க விமானி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முயற்சித்துள்ளார். இருந்த போதிலும் மோசமான வானிலை அதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து டேராடூன் திரும்பிய பிரணாப் முகர்ஜி, பின்னர் கேதர்நாத் பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார்.