யாகூப் கருணை மனுவை நிராகரித்தார் பிரணாப்.. இரவோடு இரவாக பரிசீலிப்பதா? உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
டெல்லி : யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மீண்டும் நிராகரித்து விட்டார். இந்த மனுவை இரவோடு இரவாக பரிசீலித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து யாகூப் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விடிந்தால் தூக்கு என்ற நிலையில், தண்டனையை தவிர்க்க இறுதி கட்ட முயற்சியாக உச்சநீதிமன்றத்தில் யாகூப் மேமன் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தண்டனைக்கு 14 நாட்கள் தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேமனுக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவர் ஜூலை 30 ஆம் தேதி தூக்கிலிடப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரும் யாகூப் மேமனின் நிவராண மனு, நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில்.ஆர்.தவே மற்றும் ஜோசப் குரியன் ஆகியோர் முன்னிலையான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு நீதிபதிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு யாகூப் மேமன் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மாறுபட்ட நிலைப்பாட்டினால் இந்த வழக்கின் மீதான விசாரணை மூன்று நீதிபதிகள் கொண்ட பேரமர்வுக்கு மாற்றப்பட்டது. இதன்படி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.கோஷ், அமிதவராய் ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கபட்டது.
யாகூப் மேமன் மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று யாகூப் மேமன் தாக்கல் செய்த நிவாரண மனுவை தள்ளுபடி செய்ததது.
யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கவும் மறுத்துவிட்டது. மகாராஷ்ட்ர மாநில ஆளுநர் வித்யாசகர் ராவும் யாகூப் மேமனின் இறுதி நிமிட கருணை மனுவை நிராகரித்துள்ளதால், யாகூப் மேமன் நாளை தூக்கிலிடப்படுவது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்து சட்ட அமைச்சகத்துடன் உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை மேற்கொண்டது.
இதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குடியரசுத் தலைவர் மாளிகை சென்று பிரணாப் முகர்ஜியுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது யாகூப் மேமனின் கருணை மனுவை நிராகரிக்க ராஜ்நாத் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். ஆனால் இந்த மனுவை இரவோடு இரவாக பரிசீலித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து யாகூப் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தூக்கு தண்டனைக்கு 14 நாட்கள் தடையும் கோரப்பட்டுள்ளது.
இதனால் விடிந்தால் தூக்கு தண்டனையை நிவேற்றுவதில் மகாராஷ்ட்ர அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
எனினும் மும்பை நாக்பூர் சிறை யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தயாராகி இருக்கிறது. மும்பைத் தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாபை தூக்கிலிட ஏற்பாடுகளை செய்த சிறை கண்காணிப்பாளர் யோகேஷ் தேசாய் தான் யாகூப் மேமனின் தூக்கு தண்டனைக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளார்.
பதற்றம் ஏற்படாமல் தடுக்க மும்பை முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடுப்பில் உள்ள போலீசார் உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். நாக்பூரின் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.