தேசிய கீதத்தை புறக்கணிக்காமல் இருக்க ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைமுறைகளில் மாற்றம்
குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்தை புறக்கணிக்காமல் இருக்க புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
திருவனந்தபுரம் : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்தை யாரும் புறக்கணிக்கக் கூடாது என்பதால் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் புதிய மாற்றங்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நெறிமுறைப்படி குடியரசுத் தலைவர் பேசிய பின்னர் விழாவில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்படும். இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். இது தான் காலம் காலமாக பின்பற்றப்படும் நெறிமுறை.
குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் இரண்டாவது முறையாக கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த் விழாவில் பேசும் போது "கடந்த 3 மாதங்களாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு, விழாவில் பங்கேற்பவர்கள் தேசிய கீதத்தை புறக்கணிக்காமல் இருக்க செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு கோரிக்கைக்கள் வந்துள்ளன. அதில் குடியரசுத் தலைவர் உரை முடிந்தவுடன் பலரும் அரங்கை விட்டு சென்றுவிடுவதால் தேசிய கீதத்தை புறக்கணிப்பதாக கூறப்பட்டுள்ளது."
நெறிமுறைகளில் மாற்றம்
எனவே ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என்று குடியரசுத் தலைவர் மாளிகை முடிவு செய்துள்ளது. இதன்படி குடியரசுத் தலைவர் உரைக்கு முன்னரே நன்றி தெரிவிக்கப்பட்டு, அதன் பின்னர் விழா சிறப்புரை ஆற்றப்படும். இந்த உரைக்குப் பின்னர் குடியரசுத் தலைவரும் தேசிய கீதப் பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தி விட்டு பின்னர் தான் அரங்கை விட்டு செல்வார்.
ராம்நாத் கோவிந்த் செயலுக்கு பாராட்டு
கடந்த முறை கொல்லத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு மரியாதையில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த் ராணுவ மரியாதையை ஏற்கும் போது சாரல் மழை பெய்தது. எனினும் குடை வேண்டாம் என்று கூறி மழையில் நனைந்தபடியே ராணுவ மரியாதையை திறந்த வாகனத்தில் சென்றபடியே ஏற்றார்.
திரையரங்குகளில் தேசிய கீதம்
திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன்னர் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. திரைப்படம் முடிந்த பின்னர் இசைக்கப்பட்டால் பலரும் புறக்கணித்து விட்டு செல்கிறார்கள் என்பதால் உச்சநீதிமன்றம் தேசப்பற்றை வளர்க்கும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டது.
தேசிய கீதத்திற்காக
இந்நிலையில் குடியரசுத் தலைவர் அலுவலகமும் தேசிய கீதத்தை புறக்கணிக்கக் கூடாது என்பதற்காக சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் குடிமகனிடம் இருந்தே இந்த மாற்றம் தொடங்கியிருப்பது இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.