தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 6 பேர் கருணை மனுக்களை நிராகரித்தார் ஜனாதிபதி!
டெல்லி: பல்வேறு வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகில் உள்ள நிதாரி கிராமத்தைச் சேர்ந்த சுரீந்தர் கோலி, ஏராளமான சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மகாரஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ரேணுகாபாய், சீமா இருவரும் ஏராளமான குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனைப் பெற்றுள்ளனர். அது போல மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராஜேந்திர பிரசுலாதராவ், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜெகதீஸ், அஸ்ஸாமை சேர்ந்த ஹோலிராம் ஆகியோர் கொலை, பலாத்கார வழக்குகளில் சிக்கி தூக்கு தண்டனை பெற்றனர்.
இவர்கள் 6 பேரும் தங்கள் தூக்குத் தண்டனையை நிறுத்துமாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கருணை மனு கொடுத்திருந்தனர். அந்த மனுக்கள் மீது கருத்து தெரிவிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஜனாதிபதி கருத்து கேட்டு இருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அந்த 6 மனுக்களையும் ஆய்வு செய்தார். அந்த 6 பேரின் மனுக்களை நிராகரிக்கும்படி நேற்று அவர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தார்.
உள்துறைஅமைச்சகத்தின் அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 6 குற்றவாளிகளின் கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டார்.