ஆட்சி அமைக்க மறுக்கும் கட்சிகள்... டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகிறதா?
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பா.ஜனதா 31, ஆம் ஆத்மி 28 காங்கிரஸ் 8 மற்றும் இதர கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் தங்களுக்கு ஆட்சியமைக்க தேவையான 36 இடங்கள் கிடைக்கவில்லை என்பதால், தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை என பா.ஜனதா முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹர்ஷவர்தன் நேற்றே அறிவித்துவிட்டார்.
அதேபோல், இரண்டாம் இடத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சியும், எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போவதாகவும், ஆட்சியமைக்க யாருடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்றும், மேலும் டெல்லி சட்டசபைக்கு மீண்டும் தேர்தலை சந்திக்க தயார் என்றும் தெரிவித்துள்ளது.
அதிக தொகுதிகளில் வெற்றிப் பெற்ற கட்சிகளின் இந்தத் திடீர் முடிவால், என்ன செய்வது என்பது குறித்து டெல்லி ஆளுனர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எந்த கட்சியுமே ஆட்சி அமைக்க முன்வராததால், இப்போதைக்கு டெல்லி சட்டசபையை முடக்கிவைத்துவிட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
6 மாத காலத்திற்குள் நிலைமையில் மாற்றம் வராவிட்டால், சட்டசபையை கலைத்துவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்த பரிந்துரைக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.