டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: சட்டமன்றம் முடக்கம்
டெல்லி: டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதேபோல், டெல்லி சட்டமன்றத்தை முடக்கிவைக்கவும் அவர் அனுமதி தந்தார்.
இந்தத் தகவலை, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இன்று மக்களவையில் வெளியிட்டார்.
ஜன்லோக்பால் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாததால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். அதோடு சட்டமன்றத்தை கலைக்கவேண்டும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
ஆனால், டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், டெல்லி சட்டமன்றத்தைக் கலைக்காமல் முடக்கிவைக்கவும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும், சட்டமன்றத்தை முடக்கி வைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவையின் முடிவு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.