காப்பீட்டு துறையில் 49% அன்னிய முதலீடு.. சர்ச்சைக்குரிய அரசாணைக்கு ஜனாதிபதி ஒப்புதல்
டெல்லி: காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதம் வரை அதிகரிப்பது மற்றும் நிலக்கரிச் சுரங்க ஏல முறையில் திருத்தம் உள்ளிட்ட 2 அரசாணைகளுக்கு அனுமதி அளித்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார்.
நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில், காப்பீடு துறை மசோதா மற்றும் நிலக்கரி சுரங்க ஏல முறை திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இரு அவைகளிலும் இந்த இரண்டு மசோதாக்கள் தொடர்பாக கடும் எதிர்ப்பு எழுந்ததால் கூட்டத் தொடரில் நிறைவேற வில்லை.
இந்நிலையில், கூட்டத்தொடர் முடிந்த அடுத்த நாளே மத்திய அமைச்சரவை கூடி இரு மசோதாக்களையும் அரசாணை மூலம் நடைமுறைக்கு கொண்டுவர முடிவெடுத்தது.
இதையடுத்து இந்த அரசாணை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அரசாணைக்கு அனுமதி வழங்கும் வகையில் பிரணாப் முகர்ஜி, இன்று, கையெழுத்திட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீடு சட்டதிருத்தப்படி, இத்துறையில் இனிமேல் 49 சதவீதம் அளவுக்கு அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி கிடைக்கும். தற்போது இது 26 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதன்மூலம் காப்பீடு துறைக்கு 6 முதல் 8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு முதலீடு ஈர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அரசாணைக்கு ஒப்புதல் வழங்கியிருந்தாலும், அடுத்த ஆறு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.