ஜனாதிபதி தேர்தல்... பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 66% வாக்குகள் பெற்று வெற்றி
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 66% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. 99 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாநிலங்களில் வாக்களித்த வாக்குப் பெட்டிகள் அன்றைய தினமே விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.
இதில் 4,896 எம்.பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். இதற்காக நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில தலைமை செயலகங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமாரும் களத்தில் இருந்தனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
இதில் மொத்தம் 5 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 10,98,882 வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகளும், மீராகுமார் 3,67,314 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம் பதிவான வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 66 சதவீதமும், மீராகுமாரும் 34 சதவீதமும் பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அனூப் மிஸ்ரா அறிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வரும் ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.