ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் இருந்து வாக்குப்பெட்டிகள் விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து வாக்குப்பெட்டிகள் விமானம் மூலம் டெல்லிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமாரும் களத்தில் உள்ளனர். நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலகங்களில் இன்று காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
சென்னையில் தலைமை செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. தமிழக எம்.எல்.ஏக்கள் 232 பேரும் கேரளா எம்.எல்.ஏ. அப்துல்லா மற்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாக்களித்தனர்.
உடல்நலக் குறைவால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி திமுக தலைவர் கருணாநிதி இத்தேர்தலில் வாக்களிக்கவில்லை. மேலும் காவிரி பிரச்சனையை முன்வைத்து பாமக எம்.பி. அன்புமணி ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணித்தார். மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவு பெற்றது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சட்டசபை செயலாளர் பூபதி தலைமையில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் 232 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார். இதேபோல், புதுச்சேரியில் நடைபெற்ற வாக்குப்பதிவில், புதுவை எம்.எல்.ஏக்கள் 30 பேர் வாக்களித்துள்ளனர். மாலை 5 மணிக்கு பின்னர் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இரவு 8.45 மணி அளவில் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.