ஜனாதிபதி தேர்தல்.. எதிர்க்கட்சிகள் குழு அமைத்து ஆலோசனை.. வேட்பாளர் தேர்வில் பாஜக தீவிரம்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் குழு அமைத்து ஆலோசனை நடத்தி வருவதால் பாஜக தரப்பில் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
டெல்லி: டெல்லியில் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய 9 கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், இடது சாரி கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ் உட்பட 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இந்தக் குழுவால் பாஜக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
எப்படியும் காங்கிரஸ் கட்சியை சரிக்கட்டி, ஜனாதிபதி தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று பாஜக திட்டமிட்டிருந்தது என்றும் அது இப்போது செல்லுபடியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாஜக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வரும் வெள்ளிக்கிழமை, காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது.
இந்தக்குழு ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின், சதிஷ் மிஸ்ராவுடன் ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களும் இன்று ஆலோசனை நடத்தினர். அப்போது அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, அருண் ஜெட்லி ஆகியோர் ஜனாதிபதி தேர்தல் குறித்து விளக்கமளித்தனர்.
பிரதமர் மோடி வரும் 24ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அதனால் பாஜக சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வரும் 23ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. அறிவிக்கப்படும் வேட்பாளர் அன்றே தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் எனவும் கூறப்படுகிறது.