விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவையே தோல்விக்குக் காரணம்... மன்மோகன் சிங் ஒப்புதல்
டெல்லி: தனது ஆட்சியின் போதாமைகளுக்கு தானே பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், தோல்விக்கான காரணங்களாக விலைவாசி உயர்வு மற்றும் ஊழலைக் குறிப்பிட்டுள்ளார்.
நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, அக்கட்சியின் தலைமையிலான புதிய அரசு விரைவில் பதவியேற்க உள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி படுதோல்வியடைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இத்தோல்விக்கு தாங்களே பொறுப்பேற்பதாக ஏற்கனவே அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தியும், துணைத்தலைவர் ராகுல்காந்தியும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தனது ஆட்சியின் விலைவாசி உயர்வும், ஊழலும் தான் தோல்விக்குக் காரணம் எனத் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில்,
"என்னுடைய ஆட்சியின் போதாமைகளுக்கு நான் முழுப்பொறுப்பேற்கிறேன். விலைவாசி உயர்வு, மற்றும் ஊழல் குறித்து மக்களிடம் நாம் சரியான முறையில் உரையாடவில்லை. இதனால்தான் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது.
சோனியா மற்றும் ராகுல் காந்தி இருவரும் செய்த பங்களிப்புகள், முயற்சிகள் மற்றும் அளித்த ஆதரவு அசாதாரணமானது' என்றார்.
நேற்று நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் மன்மோகன் சிங் இத்தகவல்களை கூறியதாக காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்தன் திவேதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.