தெலுங்கானாவின் விலை: தேர்தலில் அதிக இடங்களைக் கேட்கும் டி.ஆர்.எஸ்.- குழப்பத்தில் காங்கிரஸ்
ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியுடன் இணைய வேண்டுமானால் லோக்சபா தேர்தலில் அதிக சீட்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நிபந்தனை விதித்துள்ளது.
அதேபோல ஆந்திர சட்டசபைத் தேர்தலிலும் அக்கட்சி தங்களுக்கே அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனை விதித்துள்ளதாம்.
வரும் லோக்சபா தேர்தலில் பாதி லோக்சபா சீட்டுகளையும், அதேபோல சட்டசபைத் தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு இடங்களையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் காங்கிரஸுக்கு நிபந்தனை விதித்துள்ளதாம்.
நெருக்கடி...
தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்குவதன் மூலம் வரும் லாபத்தை அப்பகுதியில் வெற்றி பெறுவதன் மூலம் அடையலாம் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் உள்ளது. ஆனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அதிக இடங்களை கேட்பதால் காங்கிரஸுக்கு நெருக்கடியாகியுள்ளது.
குழப்பம்...
மேலும் தெலுங்கானா ராஷ்ரிடிய சமிதியின் நிபந்தனைக்கு காங்கிரஸ் உடன்படுமானால், அது கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பும் என்றும் காங்கிரஸ் அஞ்சுகிறது. ஆனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்காவிட்டால் அக்கட்சி காங்கிரஸுடன் இணைய முன்வராது.
ஆதரவு தேவை...
தற்போதைய நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் உதவிதான் காங்கிரஸுக்குத் தேவை. குறைந்தது, லோக்சபா தேர்தல் வரையாவது அது தேவைப்படுகிறது. எனவே அக்கட்சியைப் பகைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. அதேசமயம், அக்கட்சி கேட்பதையெல்லாம் கொடுத்தால் தனது கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
உரிமை...
மேலும் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுவதற்கு தாங்கள்தான் காரணம் என்று முழுமையாக உரிமை கொண்டாட முடியாத நிலையில் காங்கிரஸ் உள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிதான் அந்த உரிமையைக் கோரும் முழு தகுதியுடன் இருப்பதாக காங்கிரஸாரே கூறுகிறார்கள்.
நவீன தெலுங்கானா...
மறுபக்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிட ஆரம்பித்து விட்டது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி. நவீன தெலுங்கானா குறித்த பேச்சுக்களை அது ஆரம்பித்து விட்டது. இந்த நேரத்தில் நாம் காங்கிரஸிடம் முழுமையாக சரணைடையத் தேவையில்லை என்ற எண்ணமும் பல தெலுங்கானா தலைவர்களிடம் உள்ளதாம்.
பணியக் கூடாது....
13 வருடமாக தெலுங்கானா தனி மாநிலத்திற்காக கடுமையான போராட்டங்களை மேற்கொண்ட நாம் எதற்காக காங்கிரஸிடம் சரணடைய வேண்டும் என்றும் அவர்கள் கேட்கிறார்கள். நாம் மேலே இருக்கிறோம், காங்கிரஸ் கீழே இருக்கிறது. எனவே நாம்தான் கிராக்கி செய்ய வேண்டுமே தவிர நம்மிடமிருந்து பலனை எதிர்பார்க்கும் காங்கிரஸுக்கு நாம் பணிந்து போகக் கூடாது என்பது இவர்களின் எண்ணமாகும்.
முடிவு சந்திரசேகர ராவ் கையில்...
இதற்கிடையே பாஜக பக்கமும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் சில தலைவர்கள் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் சந்திரசேகர ராவ் எடுக்கப் போகும் முடிவுதான் முக்கியம் என்றும் அக்கட்சியினர் கூறுகிறார்கள்.