’தலித்’ பெண்ணை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த பூசாரிக்கு 2 ஆண்டுச் சிறை
ராய்கார்க்: சட்டீஸ்கரில் உள்ள ராய்கார்க் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த பூசாரி ஒருவருக்கு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது.
சட்டீஸ்கரில் உள்ள ராய்கார்க் மாவட்டத்தில் உள்ள சட்டிப்பளி கிராமத்தைச் சேர்ந்த பூசாரி ராஜா பாண்டே (63). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, ராஜா அங்குள்ள கோவில் ஒன்றில் சாமி கும்பிட தனது தோழிகளுடன் வந்த மாயாவதி என்ற பெண்ணை கோவிலின் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. காரணம் மாயாவதி தலித் இனத்தைச் சேர்ந்த பெண் என்பதாகும்.
அதனைத் தொடர்ந்து, தீண்டத்தாகதவர்கள் எனக் கூறி மாயாவதியை கோவிலின் உள்ளே விட மறுத்ததாக ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அனில் குமார், நேற்று குற்றவாளிக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், மேலும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.