டெல்லியில் கோயில் தோட்டத்தில் விளையாடிய 8 வயது சிறுமி பலாத்காரம் - 60 வயது பூசாரி கைது
டெல்லி: டெல்லியில் கோயில் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 60 வயது பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜென்மாஷ்டமி திருநாளையொட்டி நேற்று நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
அதன்படி, தெற்கு டெல்லியில் உள்ள சத்பிரி பகுதியில் அமைந்துள்ள கோயிலொன்றிலும் நேற்று காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. பூஜைக்கு வந்திருந்த சிறுமிகள் சிலர் இரவில் கோவில் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பூசாரி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி ஒருவரை ஏமாற்றி தனியறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பூசாரி மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அச்சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக, குற்றம் சாட்டப்பட்ட 60 வயது பூசாரியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது இளஞ்சிறாருக்கு எதிரான பாலியல் குற்றம் மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.