ஹர்திக் மீதான தேசத்துரோக வழக்கில் முகாந்திரம் உள்ளது- ரத்து செய்ய முடியாது: குஜராத் ஹைகோர்ட் அதிரடி
அகமதாபாத்: போலீசாரை படுகொலை செய்ய சொன்ன படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மீதான தேச துரோக வழக்கில் முகாந்திரம் இருப்பதால் அதை ரத்து செய்ய முடியாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினரை இதர பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டம் நடத்தி வருபவர் ஹர்திக் பட்டேல். குஜராத் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வரும் ஹர்திக் படேல் கடந்த 3-ந்தேதி சூரத் நகரில், படேல் சமூகத்தினருக்கான உயிரை தியாகம் செய்யத் தயார் என்று கூறிய இளைஞர் ஒருவரை நேரில் சந்தித்தார்.
பின்னர் அவரிடம், பட்டேல் சமூகத்தினர் ஒரு போதும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள். உங்களுக்குத் தைரியம் இருந்தால் 2 போலீஸ்காரர்களை சுட்டுக் கொல்லுங்கள் என்று அறிவுரை கூறியனார். இது வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவியது.
இதைத் தொடர்ந்து சூரத் போலீசார், நாட்டில் கிளர்ச்சியை தூண்டிவிடும் வகையில் பேசியதாக ஹர்திக் படேல் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர்.
ஹர்திக் படேல் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது தந்தை பாரத் பட்டேல் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜே.பி. பர்டிவாலா முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, முதற்கட்ட விசாரணையில் ஹர்திக் படேல் போலீசாரை கொல்வதை தூண்டிவிடும் வகையில் பேசியதற்கான முகாந்திரம் இருப்பதாகவே நீதிமன்றம் கருதுகிறது. ஆகையால் இந்த வழக்கில் 124(ஏ) பிரிவை(தேச துரோகம்) ரத்து செய்ய முடியாது. சமூகத்தில் வன்முறை மற்றும் அமைதியை சீர்குலைக்கும் விதமாக ஒருவரை தூண்டிவிடுவது தேசத் துரோகம்தான். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் இறுதியில் இதுபற்றி தெளிவாகத் தெரியவரும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இருப்பினும் இரு சமூகத்தினருக்கு இடையே மோதலைத் தூண்டிவிடும் விதமாக ஹர்திக் பட்டேல் பேசிய பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது.