பகலில் அரசு பள்ளி... இரவில் டான்ஸ் பார்: உ.பி. மாநில கொடுமை!
பகலில் ஆரம்பப்பள்ளியாகவும், இரவு நேரத்தில் ஆபாச டான்ஸ் பாராகவும் செயல்படும் கொடுமை உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது என்று செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தரபிரேதேச மாநிலத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று இரவு நேரத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி நடைபெறும் இடமாக உள்ளது என்று செய்தி மற்றும் வீடியோக்கள் வெளியாகி அனைவரிடமும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரேதேசம் மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் குழந்தைகள் படிக்க வேண்டிய இடத்தில் மது பாட்டில்கள் கிடந்தது. இது தொடர்பாக மேற்கொண்டு விசாரிக்கப்பட்டதில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை ரக்ஷாபந்தன் தினத்தை ஒட்டி ஜமால்பூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஆரம்பப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனையடுத்து அக்கிராம தலைவர் ராம்கேஷ் யாதவ், தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக பள்ளியின் சாவியை தலைமை ஆசிரியரிடமிருந்து வாங்கியுள்ளார்.
பிறந்த நாள் விழாவில், ஆபாச நடன நிகழ்ச்சியையும் மது விருந்தும் நடத்த ராம்கேஷ் யாதவ், ஏற்பாடு செய்துள்ளார். அவர்கள் மது அருந்தி கொண்டு நடனத்தை பார்ப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இதனை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பகலில் அரசு பள்ளி... இரவில் டான்ஸ் பார்: உ.பி. மாநில கொடுமை! https://t.co/5kvtUj3i0S pic.twitter.com/r9kl4NEU2F
— Oneindia Tamil (@thatsTamil) August 10, 2017
ராகேஷ் யாதவின் உறவினர்கள் தான் பள்ளியில் விழா கொண்டாடியதாக கிராமத்தினர் கூறினர். இது பற்றி, பிறந்த நாள் கொண்டாடியது உண்மை தான், ஆனால் தான் அதில் பங்கேற்கவில்லை என்று ராம்கேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
அடுத்த நாள் பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறையில் மது பாட்டில்கள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அதனை மாணவர்கள் சுத்தம் செய்யவும் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளனர்.
இது குறித்து அப்பள்ளி ஆசிரியர் அசோக் குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியில் இது போன்ற சம்பவம் நடந்தது மிகவும் மோசமான ஒன்றாகும். இதில் சம்பந்தப்பட்ட கிராம தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி திவாரி உறுதியளித்துள்ளார்.